பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்! வியாஸ்காந்துக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தரப்புத் தொடர்
ஒருநாள் தொடரின்போது தசைப்பிடிப்பினால் பாதிக்கப்பட்ட வனிந்து ஹசரங்க இன்னும் முழுமையாகக் குணமடையாத நிலையில், அவருக்குப் பதிலாக வியாஸ்காந்த் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

தற்போது கட்டாரில் நடைபெற்று வரும் வளர்ந்துவரும் நட்சத்திரங்களுக்கான ஆசியக் கிண்ண (Asia Cup Rising Stars) தொடரில் இலங்கை 'ஏ' அணிக்காக விளையாடி வரும் வியாஸ்காந்த், அங்கிருந்து நேரடியாகப் பாகிஸ்தானுக்குப் பயணிக்கவுள்ளார்.
இன்று ஆரம்பமாகும் இந்த முத்தரப்புத் தொடரில், தனது முதல் போட்டியில் நாளை மறுதினம் இலங்கை அணி ஸிம்பாப்வே அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.