துருக்கி நில அதிர்வில் உயிருடன் மீட்கப்பட்ட சிசு தொடர்பில் வெளியான தகவல்
கடந்த பெப்ரவரி மாதம் துருக்கியில் இடம்பெற்ற பாரிய நில அதிர்வில் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மாத சிசு குறித்த மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நில அதிர்வினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியின் இடிபாடுகளில் இருந்து 128 மணி நேரத்திற்கு பின்னர் குறித்த சிசு மீட்கப்பட்டது. சிசுவின் தாயாரோ வேறு உறவினர்கள் எவருமோ அந்த அனர்த்தத்தில் இருந்து உயிருடன் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் சிரமத்திற்கு மத்தியில் சிசுவினை மீட்ட மீட்பு பணியாளர்கள் சர்வதேச ரீதியாக பாராட்டப்பட்டனர். இந்தநிலையில் துருக்கிக்கு அருகில் உள்ள யுக்ரைனின் அமைச்சர் அன்ரன் கெரஸ்ஷெனோக்கோ இன்று மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பலியானதாக கருதப்பட்ட சிசுவின் தாயார் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கும் செய்தியினை அவர் தமது ட்விட்டரின் ஊடாக தெரிவித்துள்ளார். சிசுவின் தாயார் படுகாயமடைந்த நிலையில் பிறிதொரு மருத்துவமனையில் இதுவரை காலமும் சிகிச்சை பெற்று வந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
மரபணு பரிசோதனை மூலம் அவரே சிசுவின் தாயார் என்பதும் 54 நாட்களுக்குப் பின்னர் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தாயும் சிசுவும் இணைந்துள்ளனர். துருக்கியில் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற நில அதிர்வில் 30 ஆயிரம் பேர் உயிரிழந்ததுடன், 6 ஆயிரம் பாரிய கட்டடங்கள் முற்றாக அழிந்து போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் துருக்கியில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் 7ஆவது மிகப் பெரிய அனர்த்தம் என தரப்படுத்தப்பட்டுள்ளது.
நில அதிர்வின் தாக்கம் அதிக அளவில் இருந்ததனால் அண்டைய நாடான சிரியாவிலும் 3 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டவர்கள் பலியானதுடன் பாரிய இழப்புக்களும் ஏற்பட்டன.