மீண்டும் மத்திய கிழக்கில் வலுக்கும் போர் பதற்றம்.. ட்ரம்பின் கடும் எச்சரிக்கை
அமெரிக்கக் கப்பல்களை ஈரான் இலக்கு வைக்க முயன்றால், அந்த நாடு உலக வரைபடத்தில் இருந்தே துடைத்தெறியப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலின் போது, ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் முன்பை விட இப்போது ஓரளவு நெகிழ்வுத்தன்மையைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், ஈரானின் ஒட்டுமொத்த நாகரிகமே அழிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்றதொரு கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்க இராணுவம் ஈரானின் ஏழு படகுகளைச் சுட்டு வீழ்த்தியதாகத் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.