காசாவை பொறுப்பேற்கும் ட்ரம்பின் அறிவிப்பு : உலகளவில் வெளியாகியுள்ள எதிர்ப்பலைகள்
பலஸ்தீன மக்கள் வேறு இடங்களில் குடியேற்றப்பட்ட பின்னர் காசா பகுதியை அமெரிக்கா பொறுப்பேற்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட;ரம்ப்பின் அறிவிப்புக்கு பல நாடுகளும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், பலஸ்தீன மக்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் சவுதி அரேபியா நிராகரிப்பதாக அந்த நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பலஸ்தீனியர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் இரு - அரசு தீர்வுக்கான மறுகட்டமைப்பில் தமது நாடு உறுதியுடன் இருப்பதாக பிரித்தானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
சர்வதேச சட்டங்கள்
காசா பகுதி பலஸ்தீனியர்களுக்கு சொந்தமானது என்றும், அவர்கள் வெளியேற்றப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும் ஜேர்மன் அதிபர் கூறியுள்ளார். அத்துடன், இது புதிய துன்பங்களுக்கும் புதிய வெறுப்புக்கும் வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும், காசாவின் பலஸ்தீனிய மக்களின் கட்டாயமான இடம்பெயர்வதற்கு பிரான்ஸ் தனது எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறலாகவும், பலஸ்தீனியர்களின் நியாயமான அபிலாஷைகளின் மீதான தாக்குதலாகவும் இருக்கும் என்று பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், காஸா பலஸ்தீனியர்களின் நிலம், அவர்கள் காசாவிலேயே குடியிருக்க வேண்டும். அதேநேரம் இஸ்ரேலின்; பாதுகாப்பை ஆதரிப்பதாக ஸ்பெய்ன் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பலஸ்தீனியர்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறாமல் காசாவில் மீட்புத் திட்டங்களை முன்னோக்கி நகர்த்துவதன் முக்கியத்துவம் குறித்து பலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபாவுடன் எகிப்திய வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலட்டி விவாதித்துள்ளார்
மத்திய கிழக்கில், ஒரு தீர்வு இரு நாடுகள் என்ற தீர்வின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும் என்று ரஸ்யா நம்புவதாக கிரெம்ளினின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்
சர்வதேச மனித உரிமைகள்
இரு நாடுகள் என்ற தீர்வின் அடிப்படையில் பலஸ்தீன பிரச்சினையை அரசியல் தீர்வுக்கான சரியான பாதையில் மீண்டும் கொண்டு வருவதற்கான வாய்ப்பாக அனைத்து தரப்பினரும் போர்நிறுத்தம் மற்றும் மோதலுக்குப் பிந்தைய நிர்வாகத்தை எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புவதாக சீனா குறிப்பிட்டுள்ளது.
காசாவை கைப்பற்றும் திட்டம் குறித்த டிரம்பின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு ஏற்ப, போர்நிறுத்தத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது மிகவும் முக்கியம் என்று சர்வதேச மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்து மக்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்வது அல்லது நாடு கடத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அந்த பேரவை குறிப்பிட்டுள்ளது.
பலஸ்தீன மக்களின் நோக்கம்
மேலும், காசா பகுதியில் உள்ள மக்கள் இந்த திட்டங்களை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டார்கள். பலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதே தேவை, அவர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றுவது அல்ல என்று ஹமாஸின் மூத்த அதிகாரி, சமி அபு ஜுஹ்ரி தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனியர்கள் தங்கள் நிலம், உரிமைகள் மற்றும் புனித தளங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றும், காசா பகுதி மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமுடன் பலஸ்தீன அரசின் நிலத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும் பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பலஸ்தீனியர்களின் எந்தவொரு இடப்பெயர்ச்சியுடனும் உடன்படவில்லை என்று ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், அவுஸ்திரேலியாவை பொறுத்தவரையில், இரண்டு அரசாங்க தீர்வையே அது ஆதரிக்கிறது என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |