பாதகமான வானிலை! திருகோணமலை கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு
திருகோணமலை -சேருவில மற்றும் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுகளில் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று(30.1.2026) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பாதகமான வானிலை
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை கால்நடை வளர்ப்பாளர்களுக்கு அரசாங்கம் சுமார் 558 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது.

மூதூர் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 209 பயனாளிகளுக்கும், சேருவில பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 70 பயனாளிகளுக்கும் காசோலைகள் இதன்போது வழங்கப்பட்டன.
இதன்போது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாசன் சுகுணதாஸ், மாவட்ட திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் றியாத், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்கள், கால்நடை வைத்தியர்கள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.


