இன்றைய வானிலை: தாழ் அமுக்கம் தீவிரமடைந்து சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல், வடமத்திய மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களி்ல் 75 மி.மி இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும் மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 கி.மீ வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
தாழ் அமுக்கம்
இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் தாழ் அமுக்கப் பிரதேசமானது வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இலங்கைக்கு வடகிழக்குத் திசையில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இந்த தாழ் அமுக்கப் பிரதேசமானது இன்று காலை 5.00 மணியளவில் மட்டக்களப்புக்கு வடகிழக்காக சுமார் 850 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது இன்றையளவில் மேலும் விருத்தியடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் மத்திய பகுதியுடன் இணைந்து காணப்படும். இந்த தாழ் அமுக்கம் மேலும் தீவிரமடைவதுடன் நாளையளவில் சக்தி வாய்ந்த தாழ் அமுக்கமாக மேலும் நாளை மறுதினமளவில் ஒரு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொன்தா
இவ்வாறு சூறாவளியாக வலுவடையும் பட்சத்தில் இதற்கு தாய்லாந்து நாட்டினால் முன் மொழியப்பட்ட "மொன்தா" எனும் பெயர் சூட்டப்படும்.

அதனால் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அத்துடன் திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு , காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்கள்
மேலும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இந்நிலையில் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கி. மீ வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
அத்துடன் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 கி. மீ இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக அல்லது கொந்தளிப்பாக் காணப்படும்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |