இலங்கை வங்கி தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் சந்திப்பு
இலங்கை வங்கி தலைவர் ரொனால்ட் சி. பெரேராவிற்கும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்குக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை வங்கி தலைவரின் அலுவலகத்தில் இன்று இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை - தோப்பூர் இலங்கை வங்கி கிளையில் ATM இயந்திரம் நிறுவுவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அவசர தேவையின் போது ATM இயந்திரத்தில் பணம் பெறுவதற்கு சுமார் 15 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள மூதூர் நகருக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.
இதன்காரணமாக பிரதேச மக்களால் ATM இயந்திரம் ஒன்றினை நிறுவுமாறு கோரி கையொப்பம் இடப்பட்ட கோரிக்கை கடிதம் இலங்கை வங்கிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இச்சந்திப்பின் போது தோப்பூர் இலங்கை வங்கி கிளையில் ATM இயந்திரம் பொருத்துவதற்கு விரைவில் நடவடிக்கையை மேற்கொள்வதாக இலங்கை வங்கியின் தலைவர் இதன்போது உறுதியளித்ததாகவும் எம்.எஸ்.தௌபீக் மேலும் தெரிவித்துள்ளார்.
