மட்டக்களப்பு - புதூரில் பக்கத்து வீட்டில் திருட முயன்ற திருடனுக்கு ஏற்பட்ட நிலை
மட்டக்களப்பு - புதூரில் வீடு ஒன்றில் திருட முற்பட்ட பக்கத்து வீட்டு திருடன் மரத்தில் இருந்து கீழே வீழ்ந்து கால் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள புதூரில் திருடன் ஒருவன் அவனது பக்கத்து வீட்டின் கூரையை கழற்றி வீட்டில் திருடச் சென்ற நிலையில், திருடனை கண்டு வீட்டில் உள்ளவர்கள் சத்தமிட்டதையடுத்து திருடன் அங்கிருந்து தப்பி ஓடுவதற்காக அருகிலுள்ள வீட்டின் கூரை மீது பாய்ந்து தப்பிக்க முயற்சித்த போது கீழே விழுந்து கால் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (31.08.2023) மாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
புதூர் 3ம் குறுக்கு எல்லை வீதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு அருகிலுள்ள வீட்டிற்கு சம்பவதினமான நேற்று மாலை 3.30 மணியளவில் சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் கூரையை திருடன் ஒருவன் கழற்றுவதை கண்டு சத்தமிட்டதையடுத்து திருடன் கூரையில் இருந்து அருகிலுள்ள மரத்தின் பாய்ந்து ஏறி ஒழித்துக் கொண்டான்.
இந்த நிலையில் திருடனை பிடிப்பதற்காக அயலவர்கள் ஒன்றிணைந்ததையடுத்து திருடன் அங்கிருந்து தப்பி ஓடுவதற்காக அருகிலுள் வீட்டின் கூரைக்கு பாய்ந்து தப்பிக்க முயற்சித்த போது கீழே வீழ்ததையடுத்து கால் இரண்டாக உடைந்துள்ளதையடுத்து அவன் அங்கிருந்து தப்பிக்க முடியாத நிலையில் இருந்துள்ளான். இதனையடுத்து அவனை பிடித்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.