உலகின் முதல் மிதக்கும் மசூதி
உலகின் முதல் மிதக்கும் மசூதியை பெரும் பொருட்செலவில் டுபாயில் அமைப்பதற்கான பணிகளை அமீரக அரசு முன்னெடுத்துள்ளது.
அரசு சார்பிலான இந்த திட்டத்தில் டுபாயின் கவர்ச்சிக்கு கூடுதல் அம்சமாகவும், இஸ்லாமிய சுற்றுலாவின் அங்கமாகவும் மிதக்கும் மசூதி அமையும் என தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் அமீரகத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 சதவீதம் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மிதக்கும் மசூதியின் உட்புறத் தோற்றம்
உட்புறத்தோற்றம் மொத்தம் 3 அடுக்குகளில் இந்த மிதக்கும் மசூதி கட்டமைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த வகையில் முதல் தளம் தண்ணீருக்கு அடியில் அமையுமாறு கட்டமைக்கப்படவுள்ளதுடன் இத்தளத்தில் ஒரே நேரத்தில் 75 பேர் கூடி தொழுகை நடத்த இயலும்.
இரண்டாவது தளம் பல்நோக்கு மண்டபமாகவும், மூன்றாவது தளம் இஸ்லாமிய கண்காட்சியாகவும் அமைக்கப்பட இருக்கிறது.
மிதக்கும் மசூதியின் கட்டுமானச் செலவாக அமீரக திர்ஹாம் மதிப்பில் 55 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உறுதிக்காக எஃகு மற்றும் பார்வைக்கு கண்ணாடியும் கலந்ததாக, மிதக்கும் மசூதி எழுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த மிதக்கும் மசூதியை முன்வைத்து ’துபாய் இப்தார்’ முயற்சியை தொடங்கவும் அமீரக அரசு திட்டமிட்டுள்ளது.
மதத் தலமாக மட்டுமன்றி நவீனத்தின் அம்சங்களை உள்ளடக்கியும் மிதக்கும் மசூதியைக் கட்டமைக்க அமீரக அரசு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மிதக்கும் மசூதி நடைமுறைக்கு வரும்போது உலகளாவிய முதன்மை இஸ்லாமிய மதத் தலங்களில் ஒன்றாக அது அமையும் என கணித்துள்ளனர்.
மிக முக்கியமாக முஸ்லிம் அல்லாதவர்களும் இந்த மசூதியில் அனுமதிக்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.