ஹஜ் குழுவினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வேண்டும்: இம்ரான் மகரூப் கோரிக்கை
இந்த வருடத்தில் ஹஜ் குழுவினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நிவாரணம் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அமர்வில் நேற்று (21.06.2023) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரி நிதியத்தை கையாள்வதற்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான பொறிமுறையொன்று கொண்டுவரப்பட வேண்டியது அவசியமாகும்.
ஹஜ் நிதியத்தில் 14 கோடி 59 இலட்சத்து 29858.83 ரூபா கடந்த மார்ச் 28 ஆம் திகதி மிகுதியாக காணப்பட்டுள்ளது.
நலன்புரி நடவடிக்கைகள்
இந்த நிதியின் ஊடாகவே இவ்வருடத்திற்கான ஹஜ் குழுவின் உறுப்பினர்களும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூன்று உத்தியோகத்தர்களும் இலங்கை ஹஜ் யாத்திரீகர்களுக்கு தேவையான நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போது சவூதி அரேபியா சென்றுள்ளனர்.
இதில், ஹஜ் குழுவின் நான்கு உறுப்பினர்களுக்கு தலா 2 இலட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான விமான டிக்கட், ஹஜ் நிதியத்தின் நிதியிலிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, குறித்த நான்கு பேரினதும் சவூதி அரேபிய விஜயத்திற்கான செலவுகளுக்கு மொத்தமாக 40 இலட்சம் ரூபா பணம் ஹஜ் நிதியத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ள நிலையில் குறிப்பிட்ட இந்த பாரிய நிதித் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஹஜ் யாத்திரீகரின் நலன்புரி நடவடிக்கைளுக்காக சென்ற ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு ஹஜ் நிதியத்தின் நிதியினை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அனுமதி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது. எனவே, ஹஜ் நலன்புரி நிதியம் கையாள்வது தொடர்பில் ஒரு பொறிமுறை கொண்டுவரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.