ரமழானின் அருள் அனைவருக்கும் கிடைக்க நல்லமல்களுக்கு தயாராவோம் - ரிஷாட் பதியுதீன்

Risad Badhiutheen
By Thahir Mar 25, 2023 11:30 AM GMT
Thahir

Thahir

எம்மை எதிர்நோக்கும் புனித ரமழானின் அருட்பாக்கியம் சகலருக்கும் கிட்டப் பிரார்த்திப்பதுடன், அருள்மிக்க இம்மாதத்தை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ரமழானை வரவேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “புனித நோன்பு என்பது முஃமின்களுக்கு வரப்பிரசாதமாகும். இறையச்சமிக்க இந்த ரமழானை அடைந்துகொள்ளும் பாக்கியத்தை அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

பாவங்களைப் போக்கும் இம்மாதத்தில் இயன்றளவு நல்லமல்களில் ஈடுபடுவதுதான் நமது ஈருலக ஈடேற்றத்துக்கும் உள்ள ஒரே வழி. பேதங்களை மறந்து ஒன்றுபடுவதற்கு புனித ரமழான் பயிற்சியளிக்கட்டும்.

வல்ல இறைவனின் வேண்டுதலுக்காக நல்லமல்களில் ஈடுபடவுள்ள நாம், சுய ஆசைகளை ஒதுக்கி, குரோதங்களைக் களைவதற்கு இம்மாதத்தைப் பயன்படுத்த வேண்டும். எல்லா நியதிகளும் இறைவனின் விதிக்கு உட்பட்டது என்ற நம்பிக்கையில் நமது நல்லமல்கள் இருக்கட்டும்.

ஏழைகளுக்கு உதவி, பிறரின் பசியைப் போக்கி, பொறுமையைக் கையாண்டு ரமழானின் உன்னத நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக!” என்று தெரிவித்துள்ளார்.

ரமழானின் அருள் அனைவருக்கும் கிடைக்க நல்லமல்களுக்கு தயாராவோம் - ரிஷாட் பதியுதீன் | The Grace Of Ramadan