தந்தை கடனை மீள செலுத்தாததால் மகனை கடத்தி சென்ற கும்பல்

Sri Lanka Police
By Independent Writer Mar 23, 2023 01:00 AM GMT
Independent Writer

Independent Writer

புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவருடன் ஏற்பட்ட வர்த்தகம் தொடர்பிலான பிரச்சினை காரணமாக, அவருடைய 17 வயதான மகன், கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. கண்டி-ஹந்தான பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி புடவை வர்த்தகர் சுமார் 12 இலட்சம் ரூபாய் கடன்பட்டுள்ளார்.

கடன்கொடுத்தவர்கள் அக்கடனை தொடர்ச்சியாக கேட்டு தொந்தரவு கொண்டிருந்துள்ளனர், கடன்தொகையை மீள வழங்குவதற்கு அந்த வர்த்தகர் பின்னடித்தே வந்துள்ளார். இந்நிலையிலேயே அவரது மகன் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என ​பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை வீதியிலுள்ள தனியார் வகுப்புக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே, வேன் ஒன்றில் வந்த இனந்தெரியாத மூவர், அந்த மாணவனை, பலவந்தமாக வானுக்குள் ஏற்றுக்கொண்டு கடுகண்ணாவை பிரதேசத்துக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

அதன்பின்னர் மாணவனின் தந்தையான வர்த்தகருக்கு அழைப்பை எடுத்து, கடனை கொடுக்கும் வரையிலும் மகனை விடுவிக்கமாட்டோம் என எச்சரித்துள்ளனர். இதனை கேள்வியுற்ற மகனின் தாய், கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸ் பரிசோதகர், அழைப்பை ஏற்படுத்தியவரின் இலக்கத்துக்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்தி, தற்போது இருக்கும் இடத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் மாணவனுடன் சரணடையுமாறு பணித்துள்ளார்.

அதன்பின்னர், மாணவனை மட்டும் கட்டுகஸ்தோட்டையில் வைத்து பஸ்ஸொன்றில் ஏற்றிவிட்டு, சந்​தேநபர்கள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர் என்று அறியமுடிகின்றது.

சந்தேகநபர்கள் பொல்ஹாவலையைச் ​​சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த கண்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.