இலங்கையில் பெண் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஹபாயா அணிந்து செல்வதில் புதிய சிக்கல்!
பெண் சட்டத்தரணிகளுக்கான நீதிமன்ற ஆடையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளது.
வர்த்தமானியின் அடிப்படையில் சேலை, கறுப்பு நிற கால்சட்டை அல்லது கறுப்பு நிற பாவாடை என்பனவற்றை மாத்திரமே பெண் சட்டத்தரணிகள் அணிய முடியும். அதில் ஹபாய் உள்ளடங்காது.
புதிய வர்த்தமானி
மேலும் குறித்த ஆடைகள் அதாவது கறுப்பு நிற கால்சட்டை அல்லது கறுப்பு நிற பாவாடை என்பன முழங்காலிற்கு கீழ் காணப்படும் அளவிற்கு நீளமாக இருக்க வேண்டும்.
இதற்கு முன்னர் காணப்பட்ட வர்த்தமானியில், Black gown/ cloak என்ற பிரயோகத்தைப் பயன்படுத்தித்தான் முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் ஹபாயா என்பது நீண்ட சட்டை என்ற அடிப்படையில் அணிந்து வந்தார்கள்.
புதிய வர்த்தமானியில் அந்த வார்த்தை அகற்றப்பட்டிருப்பதனால் ஒரு பெண் சட்டத்தரணிக்கு இனிமேல் ஹபாயா அணிந்து கொண்டு செல்லும் அனுமதி உயர் நீதிமன்ற புதிய விதிகளின்படி இல்லை.
ஹபாயா அணிந்து செல்வதில் சிக்கல்
இதனைத் தவிர்த்து ஒரு பெண் சட்டத்தரணி ஹபாயாவை அணிந்துக்கொண்டு வழக்கொன்றிற்கு முன்னிலையாகும் போது எதிர்த்தரப்பு அவரின் ஆடையைக் கேள்விக்குட்படுத்தி ஆட்சேபிக்கலாம்.
அதனால் ஒரு சட்டத்தரணியாக ஹபாயாவை அணிந்துக்கொண்டு நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதோ அல்லது சட்டத்தரணிகளின் இருக்கையில் அமருவதோ முடியாமல் போகும்.
வட கிழக்கிற்கு வெளியே பணிபுரியும் முஸ்லிம் பெண் சட்டத்தரணிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாக அமையப்போகிறது என சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
