பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பில்கிஸ் பானு தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில், 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அவரது குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய, குஜராத் மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை விடுவித்து, குஜராத் அரசு கடந்தாண்டு உத்தரவிட்ட நிலையில், பின்னர் கடந்தாண்டு, ஆகட்ஸ் 15 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து, பில்கிஸ் பானு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை மீண்டும் விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி.நாகரத்தினா அடங்கிய அமர்வு, இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசு, குஜராத் மாநில அரசு மற்றும் குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதுடன் வழக்கின் விசாரணை, ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.