தனிச்சிங்கள சட்டத்தால் பெரும் பாதிப்பு! பண்டாரநாயக்கவின் மூத்த புதல்வி சுனேத்திரா
தனது தந்தை கொண்டுவந்த தனிச்சிங்கள சட்டம் தனக்கு ஆழ்ந்த கவலையை அளிப்பதாக முன்னாள் பிரதமர் எஸ்.டபில்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் மூத்த புதல்வியான சுனேத்திரா தெரிவித்துள்ளார்.
தனிச்சிங்கள சட்டத்தினால் நாடு பெரும்பாதிப்பை எதிர்கொண்டது என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் கருத்துப் பரிமாறல் நிகழ்வில் கலந்துகொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது “உங்களது தந்தை தனிச்சிங்கள சட்டத்தை கொண்டுவந்திருக்காவிட்டால் நாடு தற்போது மிகவும் முன்னேற்றகரமான நிலையில் இருந்திருக்கும். இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” என நேயர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சுனேத்திரா பண்டாரநாயக்க இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஆம், நான் இதற்கு பதிலளிக்க விரும்புகின்றேன். அவர் எனது தந்தை, ஆனால் இந்த நேயர் அல்லது நபர் ஒருவர் தெரிவித்ததை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன்.
நான் இதனை எப்போதும் தெரிவித்திருக்கின்றேன். உண்மையை சொல்லியாக வேண்டும். ஆம், ஏன் அவர் தனிச்சிங்கள சட்டத்தை கொண்டு வந்தார்?
அரசியல் சந்தர்ப்பவாதம் அரசியல் ரீதியில் பிரபலமாவது - உண்மையில் எனக்கு தெரியாது. ஆனால் இந்த நபர் தெரிவிப்பது உண்மை. அது எனக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.