இலங்கையில் பிரபல பாடசாலையில் கத்திகுத்து தாக்குதல் : ஐந்து மாணவர்கள் படுகாயம்
அநுராதபுரம் எப்பாவலா நகரில் உள்ள ஒரு அரசாங்க பிரதான பாடசாலையில் மாணவர், சக மாணவர் ஐவர் மீது நடத்திய கத்திகுத்து தாக்குதலில் அவர்கள் ஐவரும் காயமடைந்து எப்பாவல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள், 12 ஆம் வகுப்பில் பயிலும் உயர் நிலை தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அதே பாடசாலையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு அறிவியல் மாணவர் ஒருவரே இந்தக் கத்திக்குத்துத் தாக்குதலை நடத்தியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
பழிவாங்கும் வகையில் தாக்குதல்
சில நாட்களுக்கு முன்பு, இந்தக் கத்திக்குத்துத் தாக்குதலை நடத்திய மாணவருக்கும், அதில் காயமடைந்த மாணவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதற்குப் பழிவாங்கும் விதமாக, இன்று காலை (13) கூர்மையான ஆயுதத்தால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட மாணவரை காப்பாற்ற முயன்ற மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்பாவல காவல்துறையினர் விசாரணை
பாடசாலைக்குள் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டுவந்து 5 மாணவர்களைக் காயப்படுத்திய மாணவன், சம்பந்தப்பட்ட கூர்மையான ஆயுதத்துடன் எப்பாவல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து எப்பாவல காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.