இந்தியாவில் வைத்து மூன்று இலங்கையர்கள் கைது!
இலங்கையில் கொலைகள் உட்பட பல குற்றங்களுக்காக தேடப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலை சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியதற்காக விவேக் நகரில் வசிக்கும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
பெங்களூர்- யெலஹங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில், இவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்த போது, இந்திய மத்திய குற்றப்பிரிவு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கைது செய்யப்படுவதை தவிர்க்கவே அவர்கள் இந்தியாவிற்கு தப்பி சென்றுள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் சுமார் 15 நாட்களுக்கு முன்பு கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
"கொத அசங்க" என அழைக்கப்படும் அமில நுவன், "சுட்டா" என்றழைக்கப்படும் ரங்க பிரசாத் மற்றும் கசுன் குமார சங்க ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டுகள்
ரங்க பிரசாத் மீது இரண்டு தாக்குதல் குற்றச்சாட்டுக்களும், அமில நுவன் மீது 05 கொலைகள் மற்றும் கசுன் குமார சங்க மீது 04 கொலைகள் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை அவர்களிடமிருந்து 13 கைப்பேசிகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இவர்கள் இந்தியாவிற்கு வர உதவிய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை இந்திய மத்திய குற்றப்பிரிவு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |