இலங்கை அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி
இலங்கை அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
இந்த தொடரின் 3ஆவதும் இறுதியுமான போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3ஆவதும் இறுதியுமான போட்டி ஹமில்ரனில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணிசார்பாக அதிகபட்சமாக பத்தும் நிஷ்ஷங்க 57 ஓட்டங்களையும் தசுன் சானக்க 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
மெட் ஹென்றி, ஹென்றி ஷிப்லி மற்றும் ட்ரல் மிச்சேல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 158 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் மூன்று விக்கெட்டுக்களையும் 21 ஓட்டங்களுக்குள் இழந்தது.
எனினும் தனித்து நின்று போராடிய வில் யங், அரைச் சதத்தைப் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் 32.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்று 06 விக்கெட்டுக்களால் நியூசிலாந்து அணி வெற்றியை தனதாக்கியது.
வில் யங் 86 ஓட்டங்களையும் ஹென்றி நிக்கோலஸ் 44 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். லஹிரு குமார இரண்டு விக்கெட்டுக்களையும் கசுன் ராஜித மற்றும் தசுன் சானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த தொடரின் 2 ஆவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், தொடரை 2 க்கு 0 என்ற ஆட்டக்கணக்கில் நியூசிலாந்து வெற்றியை தனதாக்கியது
