அரசியல் வேறுபாடுகளைத் தகர்த்தெறிந்து உரிமைகளை வென்று அபிவிருத்தி காண முடியும்: நஸீர் அஹமட்
தற்போது அபிவிருத்திக்குத் தடையாகவுள்ள இன மத அரசியல் வேறுபாடுகளைத் தகர்த்தெறிந்து ஒன்றிணைந்தால் மாத்திரமே உரிமைகளை வென்று அபிவிருத்தி காண முடியும் என சுற்றாடல் அமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூருக்கு வருகை தந்த சுற்றாடல் அமைச்சர் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போது இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஏறாவூரிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இன்று (09.04.2023) சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது பிரதேசத்தில் எதிர்நோக்கப்படும் தீர்க்கப்படாதுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நஸீர் அஹமட்,
எதிர்நோக்கப்படும் பொதுவான பிரச்சினைகளை சட்டம் ஒழுங்கின் அடிப்படையில் அணுகித் தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்கு பொது நல நோக்கம் கொண்ட பெருந்தகைகள் இன, மத, அரசியல், பிரதேச வேறுபாடுகளின்றி ஒன்றிணைந்தால் மாத்திரமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண முடியும்.
மாறாக ஒவ்வொரு குழுக்களாக தனித்து இயங்கினால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகளைக் காண முடியாது. ஒட்டு மொத்த மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி என்று வருகின்றபோது அங்கு அந்த அபிவிருத்திக்குத் தடை ஏற்படுத்த எவருக்கும் இடமளிக்காத வண்ணம் பொது நலன் சார்ந்த ஆர்வமுள்ளவர்களின் அணி பலமாக இருக்க வேண்டும்.
எந்த அரசியல் சார்புள்ளவராக இருந்தாலும் அவர்கள் இந்த மையக் கருத்தை கொண்டு
மக்களை வழி நடத்த வேண்டும் என்ற அறிவூட்டலை அபிவிருத்திக்குத் தடை போடும்
குறுகிய எண்ணம் கொண்ட அரசியல்வாதிகளுக்குப் புகட்டும் விதமாக பொது நலன்
காப்போர் அணி உறுதியாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த விடயத்தில் இளைஞர்
சமுதாயம் அக்கறை எடுத்துச் செயற்பட வேண்டும்‘‘ என அழைப்பு விடுத்துள்ளார்.
