எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்த ஐக்கிய இராச்சியத்தின் விசேட குழு
ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ - பசுபிக் பிராந்திய அமைச்சர் கெத்தரின் வெஸ்ட்டுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாrவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில், ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ - பசுபிக் பிராந்திய அமைச்சர் திருமதி கெத்தரின் வெஸ்டின் பிரத்தியேக செயலாளர் ரோப் கோர், இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்ஸ், பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் அலெக்சாண்டர் ஸ்மித் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
நீண்ட கலந்துரையாடல்
ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ - பசுபிக் பிராந்திய அமைச்சர் கெத்தரின் வெஸ்ட்டுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே இந்த நாட்டின் பல்வேறு பொருளாதார, சமூக, அரசியல் விடயங்கள் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும், சுற்றுலாத்துறை தொடர்பாக ஐக்கிய இராச்சிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இந்தத் தூதுக்குழுவினரிடம் கேட்டுக்கொண்டார்.
இந்தச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.