இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 500 மாணவர்கள் அளவில் கலந்து கொண்ட தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிப்பட்டறை !

Sri Lankan Schools
By Nafeel Apr 17, 2023 06:09 PM GMT
Nafeel

Nafeel

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் நிலையம் கலை கலாசார பீடத்துடன் இணைந்து உள்வாரி பட்டதாரி மாணவர்களுக்கு தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிப்பட்டறையை இன்று  திங்கட்கிழமை (17)  கலை கலாசார பீடத்தின் கலை அரங்கத்தில் நடாத்தியது. 

இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீட மாணவர்கள் நேரடியாகவும் இணையவழியூடாகவும் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணித்தியாலங்களிற்கு மேல் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் பிரதம அதிதியாக பங்கேற்றதுடன், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் நிகழ்வு தொடர்பான அறிமுகத்தை வழங்கினார்.

சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. றியாட் ரூளி,  மாணவர் நலன்புரி மையத்தின் பணிப்பாளர் எம்.றிஸ்வான் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வை முன்னெடுத்தமை சிறப்பிற்குரியது.

தலைமைத்துவம் பற்றிய இந்நிகழ்வின் வளவாளராக சவூதி அரேபியாவின் பெற்றோலியம் மற்றும் கனிமங்கள் தொடர்பான கிங் பஹத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாதிக் எம். செயிட் கலந்து சிறப்பித்ததுடன் ஆக்கபூர்வமான வகையில் மாணவர்களுடன் இடைவினையை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிகழ்வில் ஏறத்தாழ 500இற்கு மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.   தலைமைத்துவம் தொடர்பான பிரயோக அறிவைப் பெறும் வகையில் வினா, விடைக்கான நேரம் ஒதுக்கப்பட்டதுடன் மாணவர்கள் அதிகளவான பயன்களைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.