ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் இணைவு..!
மாளிகைக்காட்டிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(SLMC) செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் இணைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பகுதியில் நேற்று(29) இரவு நடைபெற்ற ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தில் உத்தியோக பூர்வமாக இணைந்து தத்தமது ஆதரவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
எதிர்வரும் உள்ளூராட்சித்தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் காரைதீவு பிரதேச சபை தேர்தலுக்காக போட்டியிடும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் குறித்த மாளிகைக்காடு செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்துள்ளனர்.
கட்சியிலிருந்து பிரிந்த செயற்பாட்டாளர்கள்
மேலும், இதன்போது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் ஹக்கீம் செரீப் மற்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் ஏ.எம்.அகுவர் ஆகியோர் முன்னிலையில், SLMC இன் ஆதரவாளர்களாக கடந்த காலங்களில் செயற்பட்டு வந்த மாளிகைக்காடு மேற்கு வட்டார ஆதரவாளர்கள் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து இணைந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வண்ணாத்துப்பூச்சி சின்னத்தின் வெற்றிக்காக அனைத்து மக்களும் முன்னின்று செயற்படுவார்கள் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இது தவிர உள்ளூராட்சித்தேர்தலுக்கான பரப்புரைகள் மே 3ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் மே 6ஆம் திகதி நடைபெறும். இந்தத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




