'ஐயோ சாமி' பாடலுக்கு விருது: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் பாடலாசிரியர் அஸ்மின்!

Sri Lanka
By Fathima Apr 02, 2023 07:56 AM GMT
Fathima

Fathima

இலங்கையின் இசை வரலாற்றில் (SLIM KANTAR PEOPLE'S AWARDS -2023 - Song Of The Year) இந்த விருதினை பெற்ற முதல் தமிழ்ப் பாடல் நான் எழுதிய #ஐயோசாமிநீஎனக்குவேணாம் பாடலாகும்.

விருது கிடைத்தமை குறித்து பாடலை உருவாக்கிய பாடலாசிரியர் அஸ்மின்  கூறியுள்ளதாவது, 

இதற்குப் பிறகு மீண்டும் ஒரு இலங்கை தமிழ்ப் பாடலுக்கு இவ்விருது கிடைக்குமா என்று கேட்டால் நிச்சயம் கிடைக்க வேண்டும். ஆனால் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல....... ஆரம்பத்தில் இப்பாடலைக் கேட்டுவிட்டுப் பாடல் எழுதுவது எப்படி? என்று எனக்கு வகுப்பெடுக்க வந்தார்கள் சிலர் எனது வகுப்புக்கே வந்தார்கள் பலர்.

பாடலைக் கேட்ட ஒருவர் தனது முகநூலில் இதெல்லாம் ஒரு பாடலா? ம--போல இருக்கிறது என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்து ஒரு முந்நூறு பேர் சிரித்து வைத்திருந்தார்கள். அவர்களைப் பார்த்து இன்று உலகே சிரிக்கிறது.

பாடல்களை எழுதிய பாடலாசிரியன் நான்

"எதுகை மோனை இல்லை, பொருளாழம் இல்லை. கவி்த்துவம் கிஞ்சித்தும் இல்லை புதிய சொல்லாடல் இல்லை அது இல்லை! இது இல்லை! " எனப் பல இலக்கிய "மேதாவிகளும் " அடுக்கி வாசித்திருந்தனர். இப்போதும் வாசித்து வருகின்றனர்.

இது இப்படி இருக்க அடிப்படையில் ஒரு மரபு கவிஞனான என்னைத் தொலைப்பேசியில் அழைத்த யாரென்று தெரியாத தம்பி ஒருவர் "எதுகை மோனை பாடலில் இல்லை எதுகை மோனை என்றால் என்ன? அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கற்பித்தமை இந்த பதிவை எழுதும்போது எனக்கு நினைவில் வருகிறது.

#ஐயோசாமிபாடல் எனக்கு முதல் பாடலும் இல்லை கடைசிப்பாடலும் இல்லை. இவர்கள் எதிர்பார்த்த பல விடயங்களை முன்பே என்னுடைய பல பாடல்களில் பரிசோதித்துப் பார்த்துவிட்டுத்தான் இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

அதற்குக் காரணம் அந்த பாடல்கள் அவர்களுக்குத் தெரியவில்லை அல்லது அந்த பாடல்களை எழுதிய பாடலாசிரியன் நான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

ஐயோ சாமி நீஎனக்கு வேணாம்....

#ஐயோசாமி மிகச்சிறந்த பாடலா? என்று என்னைக்கேட்டால் இல்லை என்றே கூறுவேன். பத்தாண்டுகளுக்கு முன்பு இருபதாயிரம் போட்டியாளர்களை வென்றுதான் தமிழ் சினிமாவில் பாடல் எழுதும் முதல் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆனால் உலகத்தமிழர்களுக்கு நான் சென்று சேர பத்தாண்டுகள் பிடித்திருக்கிறது. அதனை ஐயோசாமிதான் சாத்தியமாக்கியிருக்கிறது.

விஜய் ஆண்டனியின் "நான்" படத்தில் "தப்பெல்லாம் தப்பே இல்லை" பாடல் எழுதியது நான் என்பது இன்று வரை பலருக்குத் தெரியவில்லை. "அமரகாவியம்" படத்தில் ஜிப்ரான் இசையில் நான் எழுதிய "தாகம் தீரப் பாடல் பலருக்குத் தெரியவே இல்லை. ஜெயலலிதாவின் இரங்கல் பாடல் "வானே இடிந்ததம்மா" கேட்டு அவரது எதிரிகள் கூட அழுதனர்.

அந்தப்பாடல் இரண்டு மாதங்கள் 24 மணிநேரமும் அவரது சமாதியில் ஒலித்தது. அதனை எழுதியது நான்தான் என்பது இந்த பதிவினை படிக்கும்வரை பலருக்கும் தெரியாமல் கூட இருக்கலாம். இப்படிப் பல பாடல்கள் உண்டு. அதற்கான காரணம் என்ன என்று என்னை நான் கேள்விகேட்டபோது கிடைத்ததே இந்த வரலாற்று வெற்றி.

உங்களைப் பாராட்டுங்கள்

அதனைச் சாத்தியமாக்கி எனது நம்பிக்கைக்கு நம்பி கை கொடுத்தது ரசிகர்களாகிய நீங்கள்தான்... உங்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள். எனது விமர்சகர்களுக்கும் நன்றிகள் கோடி.நீங்கள்தான் இந்தப்பயணத்தில் நான் தூங்காமல் விழித்திருக்க வைத்திருந்தவர்கள்.உங்களை மதிக்கிறேன் உங்கள் விமர்சனங்களையல்ல...தொடருங்கள்...

உறவுகளே ! உலகம் ஆயிரம் இல்லை இரண்டாயிரம் சொல்லட்டும் அவர்களைவிட உங்களை அறிந்தவர் நீங்கள் மட்டுமே.

எனவே, உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களைப் பாராட்டுங்கள், உங்களை விமர்சியுங்கள், உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள், உங்களை நீங்கள் முதலில் கொண்டாடுங்கள் . நிச்சயம் இந்த உலகமே திரும்பிப்பார்க்குமளவுக்கு என்றோ ஒருநாள் நீங்கள் வெல்வீர்கள்.

அன்புடன் பாடலாசிரியர் அஸ்மின்