சீனா ஆதரவளிக்கும்! மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், அவுஸ்திரேலியாவின் ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாரிஸ் கிளப் உறுப்பினர்கள், சீனா மற்றும் இந்தியா போன்ற இருதரப்பு கடனாளர்களிடமிருந்தும் ஆதரவை தாம் பெறுவோம் என மார்ச் மாதம் நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார்.
இதேநேரம் ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு செயல்முறையை வியாழன் அன்று வொஷிங்டனில் அறிவிக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.