உண்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை ஏற்பதில்லை! அப்துல் கரீம் அல் இசா
உலகில் எந்த வகையான பயங்கரவாதத்தையும், உண்மையான முஸ்லிம்கள் ஏற்பதில்லை. அவர்கள் மனித குல பாதுகாப்பில் நம்பிக்கை உள்ளவர்கள் என்று முஸ்லிம் வோர்ல்டு லீக் பொதுச் செயலாளர் ஷேக் முகமது பின் அப்துல் கரீம் அல் இசா கூறியுள்ளார்.
சவுதி அரேபியாவின் மெக்கா நகரை மையமாகக் கொண்டு ‘முஸ்லிம் வோர்ல்ட் லீக்’ என்ற தன்னார்வ அமைப்பு செயல்படுகிறது.
இதன் பொதுச் செயலாளராக ஷேக் முகமது பின் அப்துல் கரீம் அல் இசா பொறுப்பு வகிக்கிறார்.
டெல்லி ஜமா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“இஸ்லாத்தில் பயங்கரவாதத்துக்கு இடமே இல்லை. மனிதகுல பாதுகாப்பில் முழு நம்பிக்கை கொண்டது இஸ்லாம். உண்மையான முஸ்லிம் ஒவ்வொருவரிடமும் அன்பாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வார்.
இஸ்லாத்தின் அழகை வெளிப்படுத்தும்
பயங்கரவாதம் எந்த வகையாக இருந்தாலும் அவற்றை நிராகரிப்பார். உண்மையான முஸ்லிம் சீரிய ஒழுக்கங்களைக் கடைபிடிப்பார். அவரது நடத்தை இஸ்லாத்தின் அழகை வெளிப்படுத்துவாகவே இருக்கும்.
அத்துடன் இந்த விழுமியங்களை கடைபிடிப்பது ஒரு முஸ்லிமின் உண்மையான நடத்தையின் இன்றியமையாத அம்சமாகும். எந்த சூழ்நிலையிலும் அவற்றை கைவிடக் கூடாது.
இதற்கு நேர்மாறான நடத்தை மிகவும் வருந்தத்தக்கது. இஸ்லாத்தின் உண்மையான சாரத்தை அறியாதவர்களால்தான் சில செயல்கள் நடைபெறுகின்றன.
இஸ்லாத்துடன் இணைந்திருப்பதாக பொய்யாக கூறுபவர்களின் செயல்களால் இந்த மதத்தின் மீது தவறான கருத்து ஏற்படுகிறது. எதிர்மறையான நடத்தைகள் அனைத்தும் அல்லாவின் பாதையில் இருந்து விலகி செல்வதாகவே கருதப்படும்.”என கூறியுள்ளார்.