பாடசாலை மாணவி சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம்: பொலிஸார் மேலதிக விசாரணை
சிலாபம் - இரணவில் பிரதேசத்தில் சிறுமியொருவர் கயிற்றால் கழுத்து இறுகிய நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சிலாபம் - அம்பகந்தவில, புனித றொகஸ் வித்தியாலயத்தின் 4 ஆம் ஆண்டில் கல்வி பயின்று வரும் 9 வயதுடைய ஷலனி ரிதுஷா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி வீட்டின் அறையில் தூக்கில் தொங்குவதை முதலில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பார்த்து ஷாலனியின் தந்தையிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரணம் தொடர்பில் விசாரணை
சிறுமியின் மரணம் தொடர்பில் முதற்கட்ட நீதவான் விசாரணையும் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையும் இன்று (12.08.2023) காலை இடம்பெற்றது.
இதேவேளை, பிரேத பரிசோதனை சிலாபம் பொது வைத்தியசாலையில் இன்று (12.08.2023) பிற்பகல் நடைபெற்றது.
குறித்த சம்பவமானது கொலையா அல்லது தற்கொலையா என மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வாழ்வதில் சிரமம் இருந்ததால் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஷாலனியின் தாயார் குவைத் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.