வவுனியாவில் வெளிநாடு அனுப்புவதாக மோசடி செய்த நபர் கைது
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி வவுனியாவில் 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் வவுனியா பொலிஸாரினால் நேற்று (31.08) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 பேரிடம் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் மோசடி செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மற்றுமொருவரிடம் 3 பவுண் சங்கிலி ஒன்றையும் பெற்று கனடா அனுப்புவதாக கூறி மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த முறைப்பாட்டிற்கமைவாக வவுனியா தமைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி ரத்நாயக்கா தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.