ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவேன்: நாடாளுமன்றத்தில் சஜித் திட்டவட்டம்

Parliament of Sri Lanka Sajith Premadasa Easter Attack Sri Lanka
By Madheeha_Naz Apr 24, 2024 03:04 PM GMT

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (24) இடம்பெற்றுள்ள 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் (Easter Attack) தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புக் குழு

மேலும் தெரிவிக்கையில், “2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21இல் வெடித்த அழிவுகரமான குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சரியான நடவடிக்கையை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவேன்: நாடாளுமன்றத்தில் சஜித் திட்டவட்டம் | Sajith Contesting Presidential Election

தாக்குதல்கள் குறித்து விசாரிக்க சிறப்புக் குழுவை நியமிக்கப்படவுள்ளதோடு, இந்தக் குழுவில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் புலனாய்வாளர்கள் இருப்பார்கள்.

இந்நிலையில், எமது அரசாங்கத்தின் கீழ் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும்.

மேலும், உத்தேச ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு விசேட நீதிமன்றத்தை நிறுவவும் சுயாதீனமான அரச வழக்குரைஞர் அலுவலகம் ஒன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.