சாய்ந்தமருதுவில் குற்றச்செயல்களை குறைக்க பொலிஸார் முன்னெடுத்த திட்டம்
சாய்ந்தமருது (Sainthamaruthu) பொலிஸ் நிலைய பிரிவுக்குள் நடைபெறும் குற்றச்செயல்களை குறைக்கும் முகமாக பொதுமக்களின் ஆலோசனை பெறும் செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசனைக்குழு அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் அந்த குழுவின் தலைவர் எம்.கே. இர்ஷாத் கான் தலைமையில் இன்று(13) இடம்பெற்றுள்ளது.
எட்டப்பட்ட தீர்மானங்கள்
இதன் மூலம் சமூகத்தில் குற்றச்செயல்கள் குறைக்கப்படுவதுடன், பொலிஸாரின் கடமைகளை இலகுபடுத்தவும், பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான நல்லிணக்கத்தினையும் மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்வின்போது சாய்ந்தமருதில் போக்குவரத்துச் சட்டம் மற்றும் சுற்றாடல் மாசுபடுவதை தடுத்தல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதில் வீதிப்போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றுவது தொடர்பிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பிலும் பொலிஸாரினால் கையாளக்கூடிய ஏனைய விடயங்களை செயற்படுத்த ஆலோசனைகளை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
ஆலோசனைக்கூட்டம்
அத்தோடு, சாய்ந்தமருதில் வீதி ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு ஏனைய பொலிஸ் நிலையங்களின் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு குற்றவாளிகளை அடையாளங்கண்டு தண்டனை வழங்கல், விசேட போக்குவரத்து வழிமுறைகளை கையாளுதல், இரவு நேரங்களில் தேவையற்ற முறையில் வீதிகளில் கூடியிருப்பவர்கள் மற்றும் உலாவித் திரிபவர்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பை செலுத்துதல் மற்றும் நள்ளிரவுகளில் திறந்திருக்கும் கடைகள் தொடர்பில் கண்காணிப்புச் செலுத்துதல், சிரமதான நிகழ்வுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ், ஆலோசனைக் குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்ட பொதுமக்கள், பிரமுகர்களுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




