காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியான சி.ஜெனிற்றாவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இவ் உத்தரவை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு
வவுனியாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை (05.01.2024) வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஜனாதிபதியை சந்திப்பதற்கு முற்பட்டவேளை பொலிஸார் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்திருந்தனர்.
பல குற்றச்சாட்டுக்கள்
இதனால் பொலிஸாருக்கும் போராட்டகாரருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி மற்றும் போராட்டத்தினை காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் ஆகிய இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார் நீதிமன்றில் அவர்களை முன்னிலைப்படுத்தினர்.
எனினும், போராட்டத்தை காணொளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கிய நிலையில் இன்று (08.01.2024) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, கைது செய்த இரு பொலிஸார் மீதும் அவர் தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டிலும் நீதிமன்ற உத்தரவினை அவமதித்தமையினாலும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.