திருமலையில் புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு பிணை
திருகோணமலை - மூதூர் 3ம் கட்டை மலையில் புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மூதூர் 3ம் கட்டை மலையில் விகாராதிபதியினால் அ.ரமேஷ் என்பவருகெதிராக மூதூர் பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மூதூர் நீதான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்படி அவர் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி முகுந்தன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
புத்தர் சிலை விவகாரம்
இதன்போது சட்டத்தரணி துஷ்யந்தன் “குறித்த காணிக்கு அரசினால் வழங்கப்பட்ட ஒப்பம் இருக்கிறது.
பலாத்காரமாக 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுதப் படையினர் முகாம் அமைத்து அதில் சிறிய புத்தர் சிலை வைத்து வழிபட்டனர்.
பின் அவர்கள் அங்கிருந்து 2020 இல் வெளியேறும் போது பிறகு வந்து அச்சிலையை எடுத்து செல்வதாக கூறி சென்றனர்.
ஆனால் இன்று வரை அது எடுக்கப்படாததால் அந்த இடத்தில் ரமேஷ் புத்தர் சிலையுடன் பிள்ளையார் சிலை வைத்து கடந்த 4 வருடம் வழிபாடு செய்தார்.
மீறப்படும் மத சுதந்திரம்
கடந்த பொசன் தினத்தன்று விகாராதிபதி வந்து பிள்ளையார் சிலையை அகற்ற முயன்றார். ரமேஷ் எதிர்த்ததால் அவரை கைது செய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
இது மத சுதந்திரத்தை மீறும் செயல். இன முறுகலை ஏற்படுத்தும் செயல்” என தெரிவித்தார்.
மேலும், அவரை விடுவிக்குமாறு மன்றை கோரினார் இதன்படி கருத்துக்களை பரிசீலித்த நீதவான் ரமேஷூக்கு பிணை வழங்கி இன முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |