அடிப்படை உரிமைகளை மதிப்பதன் மூலம் சமூகச் சீரழிவைக் குறைக்கலாம்: அப்துல் அஸீஸ் (Photos)
அடிப்படை உரிமைகளை மதிப்பதன் மூலம் சமூகச் சீரழிவைக் குறைக்கலாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி (MWRAF) மற்றும் டயகோனியா Diakonia நிறுவன அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல் ஹபீலா தலைமையில் நேற்றைய தினம் (27.06.2023) நடைபெற்ற நிகழ்வின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக அபிவிருத்தியும் இன நல்லிணக்கமும் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அப்துல் அஸீஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, இன்று நடைபெறுகின்ற அனைத்து செயற்பாடுகளிலும் மனிதனே அடிப்படையாவான்.
சட்டத்தின் மூலம் தண்டனை
ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவனுடைய மதிப்பையும், உரிமையையும் பாதுகாக்க வேண்டியது சமுதாயத்திலுள்ள அனைவர்களினதும் கடமையாகும்.
2005ஆம் ஆண்டின் 30 இலக்க விலைமாதர் தொழிலுக்காகப் பெண்கள் மற்றும் சிறுவர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்த்தல் மற்றும் அதற்கு எதிராக கரும மாற்றுதல் பற்றிய இணக்கச் சட்டம் இலங்கையில் உள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் தண்டனைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்படி, இத்தொழிலில் ஈடுபடுத்தல் என்பது சம்பந்தப்பட்ட நபருடைய விருப்பத்துடன், அல்லது விருப்பமின்றியோ அல்லது பணத்திற்கு அல்லது வேறு உதவிக்காகவோ ஒரு நாட்டில் அல்லது அந்த நாட்டிற்கு வெளியில் விலைமாதர் தொழிலுக்காகப் பெண்கள் மற்றும் சிறுவர்களைக் கொண்டு செல்லல், விற்பனை செய்தல், விலைக்கு வாங்குதல் ஆகியவற்றைக் குற்றமாகக் கருதுவர்.
பொருளாதார நல்வாழ்வுக்கான சட்டம்
இது மட்டுமின்றி இளைஞர்களைப் பாதுகாக்க மிகவும் பெறுமதியான சட்டங்கள் எமது நாட்டில் இருப்பதை அனைவர்களும் அறிய வேண்டும்.
மக்களின் சுகாதார, பொருளாதார நல்வாழ்வுக்கான சட்டம் இலங்கைப் நாடாளுமன்றத்தில் 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
இது 2006 டிசம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
குறிப்பாக இச்சட்டத்தின்படி 21 வயதுக்குட்பட்ட எவருக்கும் சிகரட், மதுபானம் விநியோகித்தல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
உணர்ந்து கொள்ள வேண்டும்
இதைச் செய்வோருக்குத் தண்டப்பணமும் அல்லது ஒரு வருடச் சிறை அல்லது இரண்டும் வழங்கப்படும். எனவே எந்தளவுக்கு ஒரு மனிதனுக்கு உரிமை இருந்தாலும் அது சமுகத்தின் நலன் கருதி மட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது.
இத்தகைய சட்டங்கள் செயற்படும் போது சிகரட், மதுபானம் தொடர்பில் சிறுவர்களும், இளைஞர்களும் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதோடு, இதன் அடுத்த கட்டமான விபசாரம் என்னும் இழிதொழில் வணிகத்தை இல்லாதொழிக்க முடியும் என்பதை அனைவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் அப்துல் அஸீஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இச்செயலமர்வில் மற்றுமொரு வளவாளராக தேசிய ஔடத அபாயகர கட்டுப்பாட்டு அதிகார சபையின் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம் ரசாட் போதைப்பொருட்களின் தாக்கம் தொடர்பில் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.