கிழக்கில் தீவிரவாதக்குழுக்கள் என்று சர்வதேசத்தை திசைதிருப்பும் முயற்சியா..சபையில் ரவூப் ஹக்கீம்
கிழக்கு மாகாணத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் தீவிரவாத குழுக்கள் என்ற தகவல் அரசாங்கம் பொது மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காக செய்யப்படும் ஒரு நடவடிக்கையாவென தோன்றுகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (15) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்கு விசாரணை செய்ய வேண்டும் என்றிருந்தால் நேரடியாக விசாரணை செய்ய வேண்டும் அதனைவிடுத்து, தவறான செய்தியை சித்தரித்து ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தக் வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.
அவதூறான பழி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக்கொண்டு அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத எண்ணக்கருவை உருவாக்கி இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
சில அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் கடந்த 10 நாட்களாக நாட்டுக்குள் ஒரு பதற்றமான சூழலை ஏற்படுத்துவதற்காக செயற்பட்டு வந்தன.
கல்முனையில் முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து காட்டியிருந்தார்கள். அவர்களை அடிப்படைவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கின்றார்கள்.
கல்முனை மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். சாய்ந்தமருதில் தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
அந்த மக்கள்தான் அது தொடர்பான தகவல்களை வழங்கி இருந்தார்கள். அந்த மக்கள் ஒத்துழைப்பு வழங்கக்கூடியவர்கள். இது சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுங்கள்.
அவ்வாறு இல்லாமல் அதனை ஊடகங்களுக்கு தெரிவித்து ஒட்டுமொத்த மக்களையும் கஷ்டத்துக்கு உள்ளாக்காமல் அதற்கு நடவடிக்கை எடுங்கள்.
குறிப்பிட்ட நகருக்கு உண்மையில் சமய ரீதியில் தீவிரவாத கருத்துக்கள் இருந்தால், அந்த சமுதாயத்தில் உள்ள தலைவர்கள் அவருடன் சம்பந்தப்பட்டு அது குறித்து பார்க்க முடியும்.
சமூகத்தின் அடிப்படை கருத்து
அதைவிடுத்து அவரை ஒரு தீவிரவாதியாக அடையாளப்படுத்துவதும் பின்னர் தீவிரவாதியாக முடியும் என அடையாளப்படுத்துவதுவதானால் என்ன கிடைக்கப்போகிறது. சுற்றுலா பயணிகள் தான் எமது நாட்டுக்கு வராமல் இருக்கப்போகிறார்கள்.
இது தேவையற்ற குழப்பம். முஸ்லிம் சமூகத்தின் தலைவன் என்றகையில் கூறிக்கொள்வது, அரசாங்கத்துக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றிருந்தால் நேரடியாக விசாரணை செய்யுங்கள்.
இதனை பொதுவாக ஊடகங்களில் தெரிவித்து தவறான செய்தியை சித்தரித்து ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தக் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அரசாங்கம் தெரிவிக்கும் குழு தொடர்பில் எங்களுக்கு பல வருடங்களாக தெரியும்.
ஒவ்வொரு சமூகத்திலும் இவ்வாறான அடிப்படைவாத கருத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லா சமயத்தவர்களும் இப்படியான அடிப்படைவாத கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள்.
பாஸ்டர் ஒருவர் இருக்கிறார், அவர் ஏனைய சமயங்களை அவமானப்படுத்துகிறார். அதற்காக உள்நாட்டில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி நடவடிக்கை எடுங்கள். அதனைவிடுத்து தேவையற்ற குழப்பத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டாம்.
சிங்கள ஊடகங்கள் இதனை பாரதூரமான விடயமாக்கி கதைகளை சித்தரித்து வன்முறையை தூண்ட முயற்சிக்கிறார்கள். வெறுப்புணர்வை உருவாக்கப்பாக்கிறார்கள். எனவே இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு சட்ட ஒழுங்கு
அரசாங்கம் தேசிய பாதுகாப்பில் சட்ட ஓழுங்கை தவறவிட்டுள்ளது. அதனால் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அவர்கள் மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
பொது மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காக செய்யப்படும் ஒரு விடயம்தானா கிழக்கு மாகாணத்துக்கு சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்த செய்தி என கேட்கிறோம்.
நாட்டில் அமைதியை குழப்புவதற்கான ஒரே மாதிரியான விடயத்தைத்தான் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனால் அரசாங்கம் இதற்காக அனைத்துக்கும் சாட்சியங்களை நிலைநிறுத்தி அதனை உறுதிப்படுத்த வேண்டும்.
இவர்கள் தீவிரவாதிகள் என சாத்தியப்படுத்துவதற்கு சாட்சியங்கள் தேவை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட தீவிரவாதம் அடிப்படைவாதம் தொடர்பில் பேசுகிறார்.
அது அவர்களின் சிறப்புரிமை. ஆனால் வெளியில் இதைப்பற்றி பேசினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
எனவே கல்முனை சம்பவம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க அந்த மக்கள் தயாரக இருக்கிறார்கள். அதனால் அது தொடர்பான விசாரணைகள் வெளிப்படையாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |