இன்று ஜேர்மனி பயணமான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக ஜேர்மன் பயணமாகியுள்ளார்.
இன்று (27.09.2023) அதிகாலை 5.05 அளவில் கட்டார் நோக்கி பயணித்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியூ.ஆர்.659 ரக விமானத்தில் அவர் சென்றுள்ளதாகவும், அங்கிருந்து ஜனாதிபதி மற்றும் குழு ஜேர்மன் நோக்கி செல்லவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பேர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் சென்றுள்ளனர்.
உலகளாவிய பொருளாதார கூட்டுத் தீர்வு
பேர்லின் உலக மாநாடு என்பது ஒரு புதிய சர்வதேச மன்றமாகும். இது உலக தலைவர்களை ஒன்றிணைத்து வணிகம் மற்றும் கொள்கையிலிருந்து உலகளாவிய பொருளாதாரத்திற்கான கூட்டுத் தீர்வுகளைக் கண்டறிவதே இதன் நோக்கமாகும்.
பேர்லின் உச்சிமாநாடு 2023 செப்டம்பர் 28 முதல் 29 வரை தலைநகர் பேர்லினில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 24ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.