கடனை செலுத்த 10 வருட கால அவகாசம் கோரும் ரணில்
பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்த 10 வருட கால அவகாசம் கோரும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தை கோடிட்டு தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற மாணவர்களுடனான சந்திப்பின் போது, இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டிய அனைத்துப் பணத்தையும் செலுத்துவதற்கு குறைந்தபட்சம் இன்னும் 10 ஆண்டுகள் அவகாசம் கிடைக்கும் என்று நம்புவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
சீனா இந்த ஆண்டு இலங்கைக்கான அதன் கடன்களுக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதாக கூறியிருந்தது எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகளை இலங்கை நிறைவேற்றுவதில் சிக்கலை தோற்றுவித்திருந்தது.
இந்தநிலையில் சீனா தனது கடன்களை மறுசீரமைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து 2.9 பில்லியன் டொலர் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை மாதத்திற்குள் கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியப் பிணை எடுப்புத் திட்டத்தை மறுஆய்வு செய்யும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் கடன் மறுசீரமைப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு அனைத்து தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடன் மறுசீரமைப்புத் திட்டம்
அனைத்து கடன் வழங்குநர்களுடனும் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தில் இணக்கம் காணப்படாவிட்டால், இலங்கை இரண்டாவது தவணையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்று அதிகாரி ஒருவரை கோடிட்டு தெ ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதி பிணை எடுப்பின் முன்நிபந்தனைகளை சந்திக்கும் முயற்சியில் அரசாங்கம் ஏற்கனவே வரிகளை இரட்டிப்பாக்கியுள்ளது.
அத்துடன் எரிசக்தி கட்டணங்களை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது மற்றும்
மானியங்களை குறைத்துள்ளது..