ரணில் உள்நாட்டில் தமிழர்களுக்கு தவறான சமிக்ஞைகளையே தருகிறார் - மனோ கணேசன்
வெளிநாட்டுத் தமிழருடன் பேசும் ரணில், உள்நாட்டில் தமிழருக்குத் தவறான சமிக்ஞைகளையே தருகிறார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அவர் இன்று (19.12.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"உலகத் தமிழர் பேரவை அங்கத்தவர்களை, தடை நீக்கம் செய்து அழைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசுவது நல்லதே. அதை நான் வரவேற்கின்றேன். ஆனால், அவர் உள்நாட்டில் தமிழருக்குத் தொடர்ந்து தவறான சமிக்ஞைகளைத் தருகின்றார்.
ரணில் - மனோ சந்திப்பு
இதில் ஒன்று, மக்களுடன் எந்தவித நேரடித் தொடர்புகளும் இல்லாத அமைச்சர் டிரான் அலஸின் பேச்சைக் கேட்டு, எனது தொகுதி கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவுகளை ஆரம்பித்துள்ளமை ஆகும்.

இரண்டாவது, வடக்கு, கிழக்கிலாவாது மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி அங்கே மாகாண சபைகளை ஏற்படுத்த ரணில் தயாரில்லை என்பதாகும்.
மூன்றாவது, வரவு - செலவுத் திட்டத்தில் ரணில் உறுதியளித்த மலைநாட்டில் 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், அதற்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் 400 கோடி ரூபாவையும் இப்போது யார் வைத்திருக்கின்றார்கள் என்பது தெரியாமையாகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைக் கடந்த வாரம் அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில்
நேரடியாகச் சந்தித்து மூன்று விடயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பிக் கோரிக்கை
விடுத்தேன்.
தற்போது சனத்தொகை புள்ளிவிபரக் கணக்கெடுப்புக்காக சிவில் அதிகாரிகள் செய்யும் வேலைகளுக்கு மேலதிகமாக, உங்கள் அமைச்சர் டிரான் அலஸின் பொலிஸ்காரர்களை தமிழர்களின் வீடுகளுக்கு சிங்களத்தில் மட்டும் படிவங்களுடன் அனுப்பி, எனது தொகுதி கொழும்பில் வாழும் தமிழர் மத்தியில் தேவையற்ற பதட்டங்களை ஏன் ஏற்படுத்துக்கின்றீர்கள்?
10 பேர்ச் காணி
குறைந்தபட்சம் உடனடியாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலாவது மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, அங்கே முதற்கட்டமாக மாகாண சபை நிர்வாகங்களை ஏற்படுத்தலாம். அதை ஏன் இழு, இழு என்று இழுத்துகொண்டே போகின்றீர்கள்?

மலைநாட்டு பெருந்தோட்டங்களில், நீங்கள் வரவு - செலவுத் திட்டத்தில் உறுதியளித்த 10 பேர்ச் காணித் துண்டுகளைப் பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு வழங்கலாம்.
இந்திய, இலங்கை வீடமைப்பு திட்டங்களின் வீடு கட்டும் பணிகள், அரச நிர்வாக கட்டமைப்புகளின் ஊடாக நடைமுறையாக தாமதம் ஆகும்.
ஆகவே, காணி வழங்கலுக்காக நீங்கள் ஒதுக்கிக்கொண்டுள்ள 400 கோடி ரூபாவைப் பயன்படுத்தி, காணிகளைப் பிரித்து வழங்கலாம்.
ஆனால், இந்த 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், அதற்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் 400 கோடி ரூபாவையும் இப்போது யார் வைத்திருக்கின்றார்கள்?
வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு
இந்தக் கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதில் கூற வேண்டும். அல்லது அவருடன் கூட்டுக் குடித்தனம் செய்கின்றவர்கள் பதில் கூற வேண்டும்.

இவை
தொடர்பில் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த
வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கா, இந்தியா,
சுவிஸ், நெதர்லாந்து, கனடா, பிரான்ஸ், தென்னாபிரிக்கா, இத்தாலி நாடுகளின்
தூதுவர்களும் ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து, ஐரோப்பிய
யூனியன் ஆகிய நாடுகளின் துணை தூதுவர்களும், முதன்மை அதிகாரிகளும்
கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்விலும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கமாக நான் எடுத்துக் கூறியிருந்தேன் என்றுள்ளது.