சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான புதிய திட்டம் விரைவில் ஆரம்பம்: பந்துல குணவர்தன
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் நானுஒயா முதல் நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார தொடருந்து பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மின்சார தொடருந்து பாதை விரைவில்
“நுவரெலியா உள்ளிட்ட மத்திய சுற்றுலாப் பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மின்சார தொடருந்து பாதை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டமானது இயக்க மற்றும் பரிமாற்றம் (BOT) முறையின் கீழ் நிர்மாணிக்கப்படும் எனறும், அதற்கு பொருத்தமான முதலீட்டாளர் இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் ஆறாவது உயரமான தொடருந்து நிலையம்
உலகின் ஆறாவது உயரமான தொடருந்து நிலையமான கந்தபொல தொடருந்து நிலையம் உட்பட பல தொடருந்து நிலையங்களை உள்ளடக்கியதாக இந்த தொடருந்து பாதை அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனூடாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு பாரிய வசதிகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, பல புதிய தொடருந்து நிலையங்களை உள்ளடக்கி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.