தலிபான்களால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட ரேடியோ பேகம் வானொலி!
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) செயற்பட்டு வந்த ஒரே பெண்கள் வானொலி சேவையை, தலிபான்கள் இடைநிறுத்தியுள்ளனர்.
2021ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆரம்பமான ஆட்சியிலிருந்து, பொது வாழ்க்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் பெண்கள் ஒதுக்கி வைக்கப்படும் சம்பவத்தை காணக்கூடிய நிலையில், இந்த நடவடிக்கை ஆழப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காபூலை தளமாகக் கொண்ட ரேடியோ பேகம் என்ற வானொலி சேவை, பெண்களின் கல்வியை நோக்கமாகக் கொண்ட உள்ளடக்கத்துடன் பெண்களால் நடத்தப்படும் சேவையாகும்.
சோதனைக்குட்படுத்தப்பட்ட கணினிகள்
இந்தநிலையில் வானொலி நிலைய வளாகத்தை சோதனையிட்ட தலிபான் அதிகாரிகள், கணினிகள், கோப்புகள் மற்றும் தொலைபேசிகளைக் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளதுடன் எந்த பதவியையும் வகிக்காத, வானொலியின் இரண்டு ஆண் ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஒளிபரப்புக் கொள்கை மற்றும் நிலையத்தின் உரிமத்தை முறையற்ற முறையில் பயன்படுத்துதல் போன்ற பல மீறல்களைக் காரணம் காட்டி, இந்த சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டை தளமாகக் கொண்ட தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு நிகழ்ச்சிகளை அங்கீகரிக்கப்படாத முறையில் வழங்கிய குற்றச்சாட்டும், தலிபானின் ஊடக அமைச்சினால் சுமத்தப்பட்டுள்ளது.
தலிபான் விதித்த தடை
எனினும், கூறப்பட்ட வெளிநாட்டு தொலைக்காட்சி சேவை எது என்பதை, அமைச்சகம் குறிப்பிடவில்லை. இந்தநிலையில், சுயாதீன உரிமைகள் குழுவான ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் (RSF) என்ற எல்லைகள் அற்ற செய்தியாளர் அமைப்பு, குறித்த வானொலி மீதான தடையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு, தலிபான் நிர்வாகத்திடம் கோரியுள்ளது.
அத்துடன், இந்த ரேடியோ பேகம் வானொலி, ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பெண்களுக்கு சுகாதாரம், உளவியல் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளுடன் ஒரு நாளைக்கு ஆறு மணிநேர பாடங்களையும் ஒளிபரப்பி வந்தது.
மேலும், எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல், ஆப்கானிய பெண்களுக்கு கல்வி மற்றும் ஆதரவையும் வழங்கி வந்ததாக அந்த நிலையம் கூறியுள்ளது. அதன் சகோதர சேவைகள், பிரான்சின் பாரிஸில் இருந்து இணைய சேவைகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |