புதிய அதிபர் பதவி குறித்து சாய்ந்தமருது பாடசாலை முன் வெடித்த போராட்டம்(Photos)
அம்பாறை சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் புதிய பாடசாலை அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (08.04.2023) பாடசாலைக்கு புதிய அதிபர் எம்.எஸ். நபார் என்பவர் நியமிக்கப்பட்ட செய்தி பரவியதை அடுத்து பாடசாலையின் முன்பாக பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டக்காரர்களின் கோரிக்கை
இதன்போது கடந்த காலங்களில் முறையான நிர்வாகமின்றி பல்வேறு அநாகரிக விடயங்கள் இடம்பெற்று வந்த இப்பாடசாலையை பொறுப்பேற்று வினைத்திறனுடன் திறன்பட நிர்வாகித்து வந்த பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் றிப்கா அன்சார் என்பவரை கடமை செய்யவிடாமல் ஒரு தரப்பு தடுத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அதிபர் எம்.எஸ். நபார்,பாடசாலைக்கு பூட்டுக்களை பூட்டி தொடர்ந்தும் இடையூறுகளை செய்து வருவதாகவும் முன்னாள் பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் றிப்கா அன்சார் என்பவரையே அதிபராக நியமிக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட பொலிஸார்
இந்த போராட்டத்தில் சாய்ந்தமருது கல்வி பாரம்பரியத்தை சாய்ப்பதற்கு திட்டமா? பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் இடமா? ஏழைகளின் கல்வியில் கல்லை எறியாதே! பாடசாலை கல்வியை குழப்ப வேண்டாம் என்ற வாசகங்களை அடங்கிய சுலோகங்களை போராட்டக்காரர்கள் ஏந்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாய்ந்தமருது பொலிஸார் சுமூக நிலைக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டால் நாங்கள் எங்களின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என்றும் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளனர்.








