கிழக்கில் சுற்றாடல் சார்ந்த பிராந்திய வலையமைப்பை உருவாக்க புதிய திட்டம்
கிழக்கு மாகாண சுற்றாடல் சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிராந்திய வலையமைப்பை ஸ்தாபிப்பதற்தான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண மட்டத்தில் சுற்றாடலைப் பாதுகாக்கும் உபகுழுக்களை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே, கிழக்கு மாகாணத்துக்கான பிராந்திய வலையமைப்பு ஸ்தாபிக்கப்படவுள்ளது.
பசுமையான சமூக செயற்பாடு
மாவட்ட, பிரதேச மட்டங்களில் இளைஞர்களை இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தி, நாடளாவிய ரீதியில் இந்தத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொருத்தமான திட்டங்களை அடையாளம் கண்டு, பசுமையான சமூக செயற்பாட்டினால் நிலைபேறான அபிவிருத்தியை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் சுற்றாடலிலுள்ள மனிதன் முதல் சகல ஜீவராசிகளையும் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வழங்குதல், மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டல் தாவரங்களை மதிப்பீடு செய்தல், அத்தாவரங்களை புதிதாக நடுதல் மூலம் உயிர்ப் பல்வகைமையை அதிகரிப்பதற்காக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.