ஓமனில் இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட அமோக வரவேற்பு
மூன்று நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக ஓமனின் மஸ்கட் நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு துணை பிரதமர் சயீத் ஷிஹாப் பின் தாருக் அல் சையத் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றுள்ளார்.
பிரதமர் மோடியின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் முதலில் ஜோர்டான் நாட்டுக்கு சென்றார்.
சுற்றுப் பயணம்
பின்னர் எத்தியோப்பியா நாட்டில் 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அதனை முடித்து கொண்டு, ஓமனின் மஸ்கட் நகருக்கு சென்றுள்ளார்.

இதன்போது, பிரதமர் மோடிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேபோன்று மேள தாளங்கள் முழங்கியும், இசை கச்சேரி நடத்தியும், சிறுவர் சிறுமிகளின் பாரம்பரிய நடனமும் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் அவரை பார்ப்பதற்காக திரண்டிருந்த இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து, அவர்களுடன் கைகுலுக்கி பிரதமர் மோடி தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், ஓமனில் உற்சாக வரவேற்பு அளித்ததற்காக நன்றி. ஓமனில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாசப்பிணைப்பு மற்றும் ஆர்வம் உண்மையில், இரு நாடுகளுக்கு இடையேயுள்ள, மக்களுடனான உறுதியான பிணைப்பை பிரதிபலிக்கிறது என பதிவிட்டு உள்ளார்.

இந்த பயணத்தில் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரீக்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி முழு அளவில் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
இதன்போது, வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் கலாசார பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளை பற்றி ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.