மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர!
வெகு விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura KUmara Dissanayake) விஜயம் மேற்கொள்ளவுள்ளார் அதனால் பெரு நன்மைகள் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறவுள்ளன என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுதாவளையில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிருமாணிக்கப்பட்டு 7 வருடங்களாக மக்கள் பாவனைக்குத் திறந்து விடாமல் காணப்பட்ட விசேடபொருளாதார மத்திய நிலையம் கிளீன் ஸ்ரீ லங்கா வேலத்திட்டத்தின் கீழ் நேற்று(01.02.2025) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அநுர அரசாங்கம்
தொடர்ந்து இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டை நாம் பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டு மக்களிடத்தில் அக்கறை கொண்டு நாம் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம். ஆனால், கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் மக்களின் வரிப்பணங்களைக் கொண்டு பல கட்டடங்களை கட்டி விட்டு சென்று இருக்கின்றன.
அந்த கட்டடங்களில் பெரும்பான்மையான கட்டடங்கள் கைவிடப்பட்ட நிலையிலும், பராமரிப்பற்ற நிலையிலும் காணப்படுகின்றன.
இந்த நிலையில் தான் நாட்டை பொறுப்பெடுத்த ஜனாதிபதி அநுர தற்போது கிளீன் ஸ்ரீலங்கா எனும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செயற்படுத்தி வருகின்றார்.
அந்தவகையில் பயன்படுத்தாமல் இருக்கின்ற கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு கழுதாவளையிலேயே அமைந்திருக்கின்ற விசேட பொருளாதார மத்திய நிலையமும் அடையாளம் காணப்பட்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் பாவனைக்கு திறந்து விடுவதற்காக நாங்கள் வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தோம்.
பொருளாதார விடயங்களைக் கருத்திற் கொண்டு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், விவசாயிகள், அனைவரும் வாழ்க்கை கொண்டு நடத்த முடியாத நிலையில் காணப்பட்டனர்.
மக்களுக்காக..
இப்பொழுது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழைய நிலைமையிலிருந்து புதிய முன்னேற்றகரமான நிலைமைக்கு இந்த நாட்டை முன்னகர்த்திக் கொண்டிருக்கின்றோம்.
அந்த அடிப்படையில் பயன்படுத்தாமல் இருக்கின்ற கட்டடங்களை திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதற்காக நன்மைகள் கிடைப்பதற்காக திறந்து வைத்து வருகின்றோம்.
அந்த வகையில் தான் இந்த விசேடபொருளாதார மத்திய நிலையமும் இந்த பிரதேச உற்பத்தியாளர்கள், விவசாயிகள், விற்பனையாளர்கள், வியாபாரிகள், உள்ளிட்ட அனைவரும் இந்த பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக நன்மையை பெறவேண்டும் என்பதற்காகத்தான் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக பாடுபட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இவ்வாறு திறந்து வைத்திருக்கின்ற இந்த விசேட பொருளாதார மத்திய நிலையமானது இன்று மாத்திரம் செழிப்பாக இல்லாமல் தொடர்ச்சியாக இது செயல்படுவதற்கும், இயங்குவதற்கும், வியாபாரத்தில் ஒரு மத்திய தளமாக செயல்படுவதற்கும், அனைவரும் முன்னின்று செயற்பட வேண்டும்.
அதனூடாக களுதாவளை பிரதேச மக்கள் மாத்திரம் இன்றி மாவட்ட மக்கள் அனைவரும் நன்மை அடைய வேண்டும் அதற்காக இதனை மாற்றி அமைக்க வேண்டும். வெகு விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளயவுள்ளார் அதனால் பெரு நன்மைகள் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறவுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |