பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி வழங்குவது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
'டிட்வா' புயல் காரணமாக பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்தார்.
இதற்கமைய, மண்சரிவுக்கு உள்ளான காணிகளை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றிய பின்னர், அக்காணிகளை மீண்டும் அளவீடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
கணக்கெடுப்பு
இதன்போது அபாய வலயங்களில் உள்ள காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்ற தீர்மானித்தால், அனுமதி பத்திரம் கொண்ட அக்காணிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்து நட்டஈடு அல்லது மாற்றுக் காணி ஒன்றை வழங்கக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் தயாராக உள்ளது.

இதற்கமைய, சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடமிருந்து கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சில குடியிருப்பாளர்கள் அரச காணிகளில் அத்துமீறித் தங்கியிருப்பதுடன், அவர்கள் தொடர்பாகவும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க அத்திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
இது குறித்து ஏற்கனவே அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள காணி அலுவலகங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகக் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி மேலும் தெரிவித்தார்.