கத்தாரில் நடைபெற்ற புகைப்பட போட்டியில் இடம்பிடித்த இலங்கை இளைஞர்
கத்தார் சபாரி மால் நடாத்திய மாபெரும் புகைப்பட போட்டியான 'FRAMES SEASON 6' இல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தார் பிபா உலகக்கோப்பை கால்பந்து (FIFA World Cup) போட்டியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனும் தலைப்பின் கீழ் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இதில் இலங்கையில் கண்டி மாவட்டம் வடதெனிய பிரதேசத்தை சேர்ந்த ஹூபைப் முஸம்மிலின் என்ற இளைஞரின் புகைப்படம் தெரிவு செய்யப்படுள்ளது.
ஹூபைப் முஸம்மிலின், சிறு வயதிலிருந்தே புகைப்படத்துறையில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதுடன், இவர் பல போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளார்.
புகைப்பட கலைஞர்
மேலும், இந்தியத் திரை உலக பிரபலங்களும் இணைந்த மிக பிரம்மாண்டமான நிகழ்வான தமிழ் மகன் விருதில் புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார்.
அத்துடன், ஊடகம் ஒன்றில் ஊடகவியலாளராகவும் புகைப்படபிடிப்பளாராகவும் மற்றும் சஞ்சிகை ஒன்றின் முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது கத்தாரில் வடிமைப்பளாராக தொழில் புரிந்து வரும் இவர், தனது திறமையைப் புகைப்படங்கள் மூலம் வெளிக்காட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் சஃபாரி மால் நடத்தும் "FRAMES SEASON 6" பிரபல புகைப்பட போட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சுமார் முப்பது புகைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் கத்தார் அபு ஹமூரில் உள்ள சபாரி மாலில் கடந்த 2023.08.19ஆம் திகதி தொடக்கம் 2023.08.30ஆம் திகதி வரை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்டு பணப்பரிசு வழங்கப்படும்.