நுவரெலியாவில் மாயமான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
நுவரெலியா - நானுஓயா பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நானுஓயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிலாரண்டன் பகுதியில் நேற்றிரவு (08.09.2023) முதல் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் குறித்த நபர் கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்து இன்று (09.09.2023) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
நானுஓயா - கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த 49 வயதையுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நானுஓயா, கிரிமிட்டி நகரப் பகுதிக்குப் பொருட்கள் வாங்குவதற்கு செல்வதாகக் கூறிவிட்டு நேற்றிரவு வீட்டிலிருந்து சென்று திரும்பி வராததால் குடும்பத்தினரும், பொதுமக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட நிலையில் இன்று காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நானுஓயா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.