மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்!
மட்டக்களப்பு - ஓட்டமாவடி பகுதியில் மின்சாரம் மீனவர் ஒருவர் தாக்கி உயிரிழந்துள்ளார்.
ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட காவத்தமுனையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய முத்துவான் அன்சார் என்ற குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வழக்கம் போல் நேற்றும் ஓட்டமாவடி ஆற்றிலுள்ள ஆமை ஓடை குடாவில் மீன் பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பாததால் அவரைத் தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டபோது, அவர் இறால் பண்ணைக்கு அருகாமையிலுள்ள நீரோடையில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு கருதி மின்சாரம் வேலி
குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கவத்தமுனை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியாருக்குச் சொந்தமான இறால் பண்ணையின் பாதுகாப்பு கருதி மின்சாரம் வேலி இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த மின்சார வேலியானது இறால் பண்ணைக்கு அப்பாலுள்ள நீரோடைக்குக் குறுக்காவும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையில் பொதுமக்கள் தங்களது நாளாந்த உணவுக்காக மீன் பிடிப்பது வழக்கமாகும்.
பொது இடங்களில் மின்சாரம்
விடயம் தெரியாத நபர் இந்த மின்சார வேலியில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த இறால் பண்ணை உரிமையாளர் சட்டவிரோதமாக அமைத்துள்ள மின்சார வேலிக்கு எதிராக அங்கிருந்தவர்கள் விசனம் தெரிவித்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இறால் பண்ணை தவிர்ந்த பொதுமக்கள் பாவிக்கும் பொது இடங்களில் மின்சாரம் வழங்குவதைத் தடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த காலத்தில் குறித்த இடத்தில் மின்சாரம் தாக்கி யானை ஒன்றும், 3 கால் நடைகளும் இறந்துள்ளன என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.