ஹஜ் புனித யாத்திரை தொடர்பில் சவூதி அரசாங்கம் இலங்கையர்களுக்கு வழங்கியுள்ள அனுமதி
இவ்வருடம் இலங்கையிலிருந்து 3,500 யாத்திரிகள் ஹஜ் புனித யாத்திரையை மேற்கொள்ள சவூதி அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக ஏற்கனவே திணைக்களத்தில் மீளப் பெற்றுக்கொள்ளும் தொகையாக ரூபாய் 25,000 செலுத்தி, உறுதி செய்துகொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு ஹஜ் குழுவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் தீர்மானித்துள்ளன.
இந்த யாத்திரைக்கு முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹஜ் யாத்திரை
அத்துடன் மீள பெற்றுக்கொள்ளும் தொகையான ரூபாய் 25,000 இலங்கை வங்கியின் 2327593 (Hajj Account) என்ற கணக்கிலக்கத்துக்கு வைப்பு செய்து, வங்கியின் பற்றுச்சீட்டின் மூலப்பிரதியை திணைக்களத்துக்கு நேரடியாக வருகை தந்து சமர்ப்பித்து, பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொண்டு ஹஜ் பயணத்தை உடனடியாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
இதேவேளை, ஹஜ் யாத்திரிகள் தெரிவு பற்றுச்சீட்டின் இலக்க முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.