பங்குனி உத்திரம் கொண்டாடும் பாகிஸ்தான் தமிழர்கள்!

Pakistan India
By Fathima Apr 13, 2023 09:18 AM GMT
Fathima

Fathima

பாகிஸ்தான் - கராச்சியில் வசிக்கும் ஒரு சிறிய தமிழ்ச் சமூகம் ஒன்று பங்குனி உத்திரத் திருவிழாவைக் கொண்டாடியுள்ளது.

கராச்சியின் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மதராசி பாராவில் சில நூறு தமிழ் குடும்பங்கள் வசிப்பதாக சமூக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இங்குத் தென்னிந்தியாவில் உள்ள மதராஸிலிருந்து (இப்போது சென்னை) இடம்பெயர்ந்த இந்துக்களின் மக்கள்தொகை அதிகமாகவுள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கராச்சி பிரித்தானிய இராஜ்ஜியத்தால் உருவாக்கப்பட்ட போது இவர்கள் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர்.

பங்குனி உத்திரம் கொண்டாடும் பாகிஸ்தான் தமிழர்கள்! | Pakistani Tamils

தென்னிந்திய மத மரபுகள்

பிரிவினைக்குப் பிறகு, 50 முதல் 60 குடும்பங்கள் சிறந்த பொருளாதார வாய்ப்புகளை நம்பி இங்குக் குடியேறியுள்ளன. இந்த குடும்பங்கள் நகரத்தில் உள்ள மூன்று முக்கிய குடியிருப்பு பகுதிகளான மதராசி பாரா, டிரி ரோடு மற்றும் கோரங்கி ஆகியவற்றில் பிணைப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.

இங்குத் தமிழ்ச் சமூகம் 1964இல் மாரியம்மன் கோவிலைக் கட்டியுள்ளது. இது அவர்களின் முக்கிய மக்கள் கூடும் சபையாக விளங்குவதுடன், அனுமன் கோவில் என்று அழைக்கப்படும் மற்றொரு பெரிய கோவிலும் இங்குக் கட்டப்பட்டு வருகிறது. 

55 வயதான தமிழரான மரியம் ஸ்வாமி, தமது சமூகத்திலும், அவரைச் சுற்றியுள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியிலும் தனது இறைப் பணிகளுக்காக நன்கு மதிக்கப்படுகிறார். 0 இவரது வீட்டிற்கு எதிரே தான் அனுமன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 

எல்லா மத விழாக்களுக்கும் இங்கு வாழும் சமூகத்தினர் தங்களுக்குள்ளாகவே நிதி வசூலிப்பதாகவும், இந்தக் கோவிலைக் கட்டவும் மக்கள் நன்கொடை கொடுத்ததாகவும் அவர் என்னிடம் தெரிவித்துள்ளார். 

கராச்சியில் உள்ள தமிழ் இந்துக்கள் தென்னிந்தியாவின் மத மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் புனிதமான பண்டிகைகளின் போது இறைச்சியைத் தவிர்த்து, நோன்பிருந்து வெறும் கால்களில் யாத்திரை செல்வது, பங்குனி உத்திரத்தின் போது அழகு செய்வது போன்ற சடங்குகளைச் செய்கிறார்கள்.

பங்குனி உத்திரம் கொண்டாடும் பாகிஸ்தான் தமிழர்கள்! | Pakistani Tamils

விரதம் இருக்க வேண்டும்

இந்த பண்டிகையைத் தவிரப் பொங்கல், தைப்பூசம் மற்றும் மாரியம்மன் திருவிழா போன்ற பிற மத விழாக்களையும் பக்தி சிரத்தையுடன் கொண்டாடுகின்றனர்.

பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டதாகவும் தன்னை போன்றோருக்கு புதிய அனுபவம் என்கிறார் பக்தையான ஈஷா ரமேஷ்.

"இந்த நிகழ்வுக்காக இரண்டு மாதங்களாக மீன், இறைச்சி உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும்," என அவர் கூறியுள்ளார்.

80களில் இருக்கும் சீதா என்ற மூதாட்டி, சமூகத்தில் உள்ள மற்ற பெண்களுக்குச் சமைத்து உதவி செய்யும் போது, புழுங்கல் அரிசி, பருப்பு போன்றவற்றைக் கலவையின்றி சமைப்பதாகச் சீதா என்னிடம் கூறினார்.

மதராசி பாராவை சுற்றிலும் பல முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. நீங்கள் அந்த இடத்தை உன்னிப்பாகக் கவனித்தால், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் சமய நல்லிணக்கத்துடன் இருப்பதைக் காணலாம்.

பங்குனி உத்திரம் கொண்டாடும் பாகிஸ்தான் தமிழர்கள்! | Pakistani Tamils

பக்தர்கள்

அருகே உள்ள மசூதியில் தொழுகைக்கான நேரம் வந்தபோது, மாரியம்மன் கோவிலின் காளிதாஸ் அங்குள்ள பக்தர்களிடம் அம்மன் முழக்கத்தையும் கோவில் மணி அடிப்பதையும் நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து, பங்குனி உத்திரம் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது, வழிநெடுகிலும் நின்று கொண்டிருந்த முஸ்லிம்கள், அவர்களைப் பிரமிப்புடன் பார்த்து மரியாதையுடன் வழிவிட்டுள்ளனர்.

மதராசி பாராவில் வசிக்கும் வயதான பெண்மணியான காமாட்சி கந்தசாமி, "நாங்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம், முஸ்லிம் சமூகத்தால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் வந்ததில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

ஊர்வலத்திற்குப் பிறகு பல இந்து பக்தர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். ஆனாலும் மரியம் சுவாமி உண்ணாவிரதத்தை முடிக்காமல் மற்றவர்களுக்குச் சேவை செய்தார். அது பற்றிக் கேட்டபோது, மாலையில் முஸ்லிம்களுடன் சேர்ந்து நோன்பு துறப்பேன் என்று அவர் என்னிடம் தெரிவித்துள்ளார்.

"எனக்கு ஐம்பத்து ஐந்து வயது. ஒவ்வோர் வருடமும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பேன். மாதம் முழுவதும் விரதம் இருப்பேன்.

பங்குனி உத்திரம் கொண்டாடும் பாகிஸ்தான் தமிழர்கள்! | Pakistani Tamils

பாகிஸ்தானிய கலாசாரம்

என் மகன், மருமகள் அனைவரும் நோன்பு துறந்தார்கள். அல்லாஹு அக்பர், இறைவன் அருளுடன் மாலையில் நோன்பு துறப்பேன். இது இங்குள்ள அனைவருக்கும் தெரியும்," என மரியம் சுவாமி கூறுகிறார். 

2017ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையான 207.68 மில்லியனில் 1.73 சதவீதம் பேர் இந்துக்கள்.

கராச்சியில் தமிழ் இந்துக்கள், ஒரு மத சிறுபான்மையினரின் துணைக்குழுவாக இருப்பதால், தங்கள் சொந்த வளமான கலாசார பாரம்பரியத்தின் மீது ஒரு பிடியை வைத்திருக்கிறார்கள். அத்துடன் பிரதான பாகிஸ்தானிய கலாசாரத்துடனும் அவர்கள் கலந்திருக்கிறார்கள்.

பங்குனி உத்திரம் கொண்டாடும் பாகிஸ்தான் தமிழர்கள்! | Pakistani Tamils

தமிழில் பாடல்

கராச்சியின் இந்த பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். ஆனால் பலர் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் உருது மொழி பேசும் புலம்பெயர்ந்த சமூகங்களுடன் ஒருங்கிணைந்துள்ளனர்.

இங்குள்ள சமூகத்தில் உள்ள பெரியவர்களுக்குத் தமிழ் மொழி மீது பிடிப்பு உள்ளது.

ஆனால் இளைய தலைமுறையினர் தங்கள் தாய்மொழியில் சில வாக்கியங்களைப் பேச முடியாமல் வார்த்தைகளைத் தேடுகிறார்கள். இவர்களில் பலரால் தமிழில் அனைத்து பாடல்களையும் பாட முடிகிறது. ஆனால், அவர்களில் பெரும்பாலானோரால் தமிழ் மொழியை எழுத்துக் கூட்டிப் படிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.