யாழில் சைக்கிளில் சென்ற நபர் கீழே விழுந்து உயிரிழப்பு
வைத்தியசாலைக்கு, மருமகனுடன் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற ஆணெருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் வெளிச்சவீடு வீதி, பருத்தித்துறையை சேர்ந்த பிலிப்பு இராஜசிங்கம் (வயது 52) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 7ஆம் திகதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக மந்திகை வைத்தியசாலைக்கு, தனது மருமகனின் சைக்கிளின் பின்னால் இருந்து சென்றுள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்நிலையில் இடைவழியில் அவர் கீழே விழுந்துள்ளார். அவர் முச்சக்கர வண்டி மூலம் மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் 10 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் நேற்றையதினம் ஒப்படைக்கப்பட்டது.