இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கப்பல் வழி செய்தி
இந்தியாவிடமிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் வழி செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது என இந்திய செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இச்செய்தியானது, கடந்த சனிக்கிழமை (03.02.2024) ஐ.என்.எஸ்.கரன்ஜி எனப்படும் நீர்மூழ்கி கப்பலின் மூலமே அனுப்பப்பட்டுள்ளது.
சீனா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் கடல்வள ஆராச்சியை மேற்கொள்ளும் முகமாக தமது ஆராய்ச்சி கப்பலான 'சியாங் யங் கொங் 3' என்னும் கப்பலுக்கு அனுமதி வேண்டி கோரியிருந்தது.
கடும் எச்சரிக்கை
எனினும் இலங்கை, இந்தியாவின் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கருத்திற்கொண்டு அதனை நிராகரித்தது.
மறுபுறத்தில் மாலைத்தீவில் சீன-சார்பு ஆட்சியை கொண்டிருக்கும் அரசாங்கம் கடந்த 23ஆம் திகதி சீனாவின் கப்பல் கோரிக்கைக்கு அனுமதியை வழங்கியது.
இதனையடுத்தே, குறித்த இரண்டு நாடுகளுக்கும் கடும் செய்தியை கூறும் வகையில் இந்தியா 100 பேர் பயணிக்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த கப்பல் இன்று கொழும்பில் இருந்து மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்படவுள்ளது.
இதேவேளை, சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் மாலைத்தீவுக்கு இந்த மாதம் 8ஆம் திகதி செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.